ஒவ்வொரு குழந்தையின் மீதும் 'வாழை' செய்யும் நேரடி முதலீடுதான் பள்ளித்தோழர்கள். கிராமப்புற, மலைக்கிராம அரசுப் பள்ளிகளில் குடும்பங்களின் நம்பிக்கையைப் பெறும் இவர்கள், படித்தல், எழுதுதல், கணிதம் போன்ற அடிப்படைத் திறன்களில் பின்தங்கிய குழந்தைகளுக்குப் பயிற்சியளித்துப் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதைத் தடுக்கிறார்கள்.
எங்கள்பணி
தமிழ்நாட்டின் கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்குப் பயிற்சி பெற்ற, அர்ப்பணிப்புள்ள பள்ளித்தோழர்களை அனுப்பி, அவர்கள் நாள்தோறும் அங்கேயே இருந்து வழிகாட்ட வழிவகை செய்கிறோம்.
கள ஒருங்கிணைப்பாளர்கள் வாரந்தோறும் பள்ளிகளுக்குச் சென்று பள்ளித்தோழர்களை வழிநடத்துகிறார்கள். அதோடு தொழில் வழிகாட்டிகள், பள்ளிப் போட்டிகள் மற்றும் CSR பங்களிப்புகள் மூலம் மாணவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான கூடுதல் ஆதரவை உறுதி செய்கிறார்கள்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அவர்களின் எதிர்காலக் கனவுகளுக்குப் புதிய வழிகாட்டவும் தன்னார்வலர்களாகிய நீங்கள் தேவை. உங்களின் தொடர்புகள் மூலம் இந்த மாற்றத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லுங்கள். கற்பித்தல் அனுபவம் எதுவும் தேவையில்லை; ஆர்வம் இருந்தால் போதும்.
கிருஷ்ணகிரி · தர்மபுரி · விழுப்புரம்
2005 முதல் 2024 வரை, வாழை தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மாணவர்களுக்கு சேவை செய்தது. 2025-ல், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, அய்யூரைத் தாண்டிய காடும் மலையும் சூழ்ந்த பகுதிக்கு விரிவடைந்தோம் — சில கிராமங்கள் காட்டுப் பாதைகளுக்குள் 20–30 கி.மீ. தொலைவில் உள்ளன.
கொடகரை மேல்நிலைப் பள்ளியில் தொடங்கினோம். 2026 முடிவதற்குள், 10 கிராமிய அரசுப் பள்ளிகளை எட்ட வேண்டும் என்பது எங்கள் இலக்கு — வந்து போகும் ஒரு பயிலரங்கம் அல்ல, நிலைத்திருக்கும் ஒரு மனிதர்.